இலங்கையில் சிறுவர் சமூக வலைத்தளத்தை தடை செய்ய அரசாங்கம் தீவிர பரிசீலனை!!

268

இணையத்தளங்களில் பாடசாலை மாணவர்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய மற்றும் ஆபாசமான விடயங்கள் கட்டுப்பாடின்றி பரவி வரும் நிலையில், 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது குறித்து இலங்கை அரசாங்கம் தற்போது தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவிக்கையில், சமூக ஊடகங்கள் ஊடாக கடந்த காலங்களில் பதிவான பாரிய அளவிலான அசம்பாவிதங்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தடை குறித்த ஆலோசனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இவ்வாறான கட்டுப்பாடுகளை விதிக்கும் இறுதி முடிவு வெகுஜன ஊடக அமைச்சு அல்லது கல்வி அமைச்சினால் எடுக்கப்பட வேண்டும். கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்பட்டதும், அதனை அமுல்படுத்துவதற்கான முழுமையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்கத் தயார் என ர பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.

அண்மையில் கொழும்பு பாடசாலை ஒன்றின் தலைமை மாணவர் மற்றும் மூன்று ஆசிரியைகளுக்கு இடையிலான நெருக்கமான உறவு குறித்த கானொளிகள் வைரலானதைத் தொடர்ந்து இந்த விவாதம் வலுப்பெற்றுள்ளது.

“சமூக ஊடக உள்ளடக்கங்களால் சிறுவர்களின் மனநிலைக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க நாடு ஒரு தீர்க்கமான முடிவை நோக்கி நகர வேண்டும்.” என எரங்க வீரரத்ன தெரிவித்தார்.

அதேவேளை சிறுவர்களின் மனநலம், இணையவழி அச்சுறுத்தல்கள் (Cyberbullying) மற்றும் தீய உள்ளடக்கங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கப் பல நாடுகள் ஏற்கனவே இவ்வாறான சட்டங்களைக் கொண்டு வந்துள்ளன.

இதன்படி அவுஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை கடந்த டிசம்பர் முதல் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து சீனா,பிரான்ஸ்,அமெரிக்கா (புளோரிடா) ஆகிய பகுதிகளிலும் சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.