
அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் 2027ஆம் ஆண்டு சம்பள உயர்வு வரும் வரை வேறு எந்தவொரு கொடுப்பனவும் அதிகரிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
கண்டியில் ஜனாதிபதி தலைமையில் இன்று (06.02.2026) காலை இடம்பெற்ற நிகழ்வில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், அரச சேவையைப் பொறுத்தவரை அடிப்படைச் சம்பள உயர்வே முக்கியம் என்று நாங்கள் கருதினோம். அந்த அடிப்படை சம்பள உயர்விற்காக மாத்திரம் 2025ஆம் ஆண்டில் 11,000 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டு இந்த ஜனவரி மாதத்திலேயே மேலும் 11,000 கோடி ரூபா செலவிடப்படுகிறது. 2027இல் அடுத்த கட்டமாக 11,000 கோடி ரூபா செலவிடப்படவுள்ளது. 2027 ஆகும்போது எமது அரச சேவையின் சம்பள உயர்வுக்காக மாத்திரம் நாங்கள் ஏற்கும் செலவு 33,000 கோடி ரூபாவாகும்.
இவ்வாறு சம்பள உயர்வு செய்திருக்கும் நிலையில், சிலர் மீண்டும் இந்தக் கொடுப்பனவை கூட்டுங்கள், அந்தக் கொடுப்பனவை கூட்டுங்கள் என்று கேட்பதை நான் காண்கிறேன். அது நடக்காது.
முதலில் நாங்கள் 2027இல் மூன்றாவது சம்பள அதிகரிப்பு வந்த பின், எமது வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்படும் தாக்கத்தை பார்த்துவிட்டுத் தான் ஏனைய கொடுப்பனவுகள் பற்றி யோசிப்போம்.
அதனால் யார் எவ்விதத்தில் ஆர்ப்பாட்டம் செய்தாலும், வீதியில் இறங்கினாலும் 2027 ஆம் ஆண்டு அடுத்த சம்பள உயர்வு வரும் வரை கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட மாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.





