கடந்த 28 மாதங்களில் இல்லாத அளவுக்கு சாதனை படைத்த இலங்கை!!

141

கடந்த பெப்ரவரி 5ஆம் திகதியுடன் நிறைவடைந்த வாரத்தில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 24.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பத்திரங்களைக் கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த 28 மாதங்களில் பதிவான மிக அதிகப்படியான வெளிநாட்டு முதலீடாகும் என மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டின் முதல் ஐந்து வாரங்களில் மாத்திரம் இலங்கைக்குள் 12,654 மில்லியன் ரூபாய் (சுமார் 41.1 மில்லியன் டொலர்) நிகர வெளிநாட்டு முதலீடு கிடைத்துள்ளது.

அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பால், முதலீட்டாளர்கள் இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் சந்தைகளை நோக்கித் திரும்பியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மைக்காலத் தரவுகளின்படி, நாட்டின் அரச பத்திரங்கள் மீதான வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வம் கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த பெப்ரவரி 5ஆம் திகதியுடன் நிறைவடைந்த வாரத்தில் மாத்திரம் 7,463 மில்லியன் ரூபாய் பெறுமதியான பத்திரங்கள் வெளிநாட்டவர்களால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 23 வாரங்களில், 16 வாரங்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ச்சியாக இலங்கை ரூபாய் பத்திரங்களைக் கொள்வனவு செய்துள்ளனர்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட போதிலும், இலங்கையின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் கொள்கைகள் மற்றும் நிலையான வட்டி விகிதங்கள் காரணமாக இந்த முதலீட்டு வரத்து அதிகரித்துள்ளது.

குறிப்பாக, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உலகளாவிய முதலீட்டாளர்களை இலங்கை போன்ற நாடுகளின் பக்கம் ஈர்த்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் டொனால்ட் ட்ரம்ப்பின் வரி அறிவிப்புகளைத் தொடர்ந்து ஏற்பட்ட சிறிய அளவிலான வெளியேற்றத்திற்குப் பிறகு, தற்போது முதலீடுகள் மீண்டும் வலுவடைந்து வருவது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்குச் சாதகமான ஒன்றாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.