மனைவி, இரு குழந்தைகளுக்கு விஷம் கலந்த கேக் கொடுத்து கணவா் எடுத்த விபரீத முடிவு!!

35

சென்னை பெரம்பூர் சங்கர மடம் பகுதியை சேர்ந்த சகாய செபாஸ்டின் தனியார் கையிருப்பு கிடங்கில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ரெக்ஸி பியூலா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.

பல சிகிச்சைகள் எடுத்தும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் குடும்பம் முழுவதும் சோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த செபாஸ்டின் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்ததாக தெரிகிறது.

நேற்று இரவு வீட்டருகே உள்ள கடையில் இருந்து ‘ஹேப்பி பேமிலி டே’ என்று எழுதப்பட்ட கேக் வாங்கி வந்து குடும்பத்துடன் வெட்டியுள்ளார். கேக் சாப்பிட்ட சில நிமிடங்களில் மகன் இமான் ஆண்டோ மயங்கி விழுந்தார்.

தொடர்ந்து மனைவி மற்றும் மகளும் மயங்கி விழுந்ததை பார்த்த செபாஸ்டின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு செபாஸ்டின் மற்றும் அவரது மகன் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பியூலா மற்றும் மகள் இவாஞ்சலின் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்ட விசாரணையில் கேக்கில் விஷம் கலந்து குடும்பத்துடன் தற்கொலை செய்ய முயன்றது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.