
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் புதிய வரி விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது,
இதன் விளைவாக எதிர்காலத்தில் வாகன விலைகள் அதிகரிக்கும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடக செய்தித்தொடர்பாளர் அரூஷ் ரோட்ரிகோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது 2026 பட்ஜெட்டில் அங்கீகரிக்கப்பட்ட வரி என்றும், தற்போது அனுமதி பெறும் வாகனங்களுக்கு இது பொருந்தாது என்றும் அவர் கூறினார்.
முந்தைய வரவுசெலவு திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட இந்த வரி, ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் சுங்கச்சாவடிகளில் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ரோட்ரிகோ கூறியுள்ளார்.

வாகனங்களின் மதிப்பு அதிகமாக இருப்பதால், இந்த வரி நுகர்வோரால் உணரப்படும் என்றும், இந்த வரி காரணமாக சுமார் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள வாகனத்தின் விலை சுமார் ரூ. 250,000 அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக வாகன இறக்குமதித் துறையில் சில பின்னடைவுகள் ஏற்பட்டிருந்தாலும், வாகனப் பதிவு தரவுகளின்படி, நுகர்வோர் அதிக ஆர்வத்துடன் வாகனங்களை வாங்குவது கவனிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் செயல்படுத்தப்படும் வரிக்கு முன்னர், நுகர்வோர் தங்கள் வாகன கொள்முதலை இறுதி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான சர்வதேச சந்தையில் தேவை அதிகரித்துள்ளதால், அந்த நாட்டில் ஏல விலைகளும் அதிகரித்துள்ளன.
அதன்படி, அரசாங்கத்தின் புதிய வரி மற்றும் சர்வதேச சந்தை விலை உயர்வு ஆகிய இரண்டின் காரணமாகவும், நாட்டில் வாகன விலைகள் எதிர்காலத்தில் நிச்சயமாக அதிகரிக்கும் என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.





