
குறைந்த அழுத்தப் பிரதேசமானது வலுவிழந்து, இலங்கைக்கு தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்றைய தினம் (20.02.2026) பிற்பகல் 2 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி முதல் ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு முதல் திருகோணமலை வரையிலான கடற்கரையோர கடல் பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கைக்கு கிழக்காக வங்காள விரிகுடாவில் இன்று புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகுகின்றதாகவும், இது நாளை மறுநாள் தாழமுக்கமாக மாற்றமடையும் எனவும் யாழ். பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார்.
முதலாம் இணைப்பு

இலங்கைக்கு கிழக்காக வங்காள விரிகுடாவில் இன்று புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகுகின்றதாக யாழ். பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார்.
இது நாளை மறுநாள் தாழமுக்கமாக மாற்றமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனது முகப்புத்தகத்தில் இன்று (18.02.2026) இட்டுள்ள பதிவில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அதில் மேலும், இதனால் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் மழை இன்றும் (20.02.2026), நாளையும் (21.02.2026) நாளை மறுநாளும் (22.02.2026) பரவலாக கன மழை முதல் மிகக் கனமழையாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் மேற்குறிப்பிட்ட மூன்று நாட்களிலும் அவ்வப்போது கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு
இதேவேளை குறைந்த அழுத்தப் பிரதேசமானது இலங்கைக்கு தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.





