
இந்த ஆண்டு 23,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு ஆட்சேர்ப்பு செயல்முறையை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சக ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பிரதமர் இதனை கூறியுள்ளார்.
இந்த திட்டம் தற்போதைய ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பான சிக்கல்களை கணிசமாகக் குறைக்கும் என்றும், அதன்படி, திறந்த மற்றும் வரையறுக்கப்பட்ட அடிப்படையில்பரீட்சைகளை நடத்தி பட்டதாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான அமைச்சு ஆலோசனைக்குழுவின் கீழ் கல்வி கவுன்சிலை நிறுவுவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை, பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க, அமைச்சர் ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் அமைச்சகத்துடன் தொடர்புடைய விஷயங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு எதிர்கால நடவடிக்கைகளுக்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.





