
வவுனியா, சந்தை உள்வட்ட வீதியில் உள்ள நவீன சந்தை கட்டடத் தொகுதியில் இயங்கிய இரு கடைகளை உடைத்து திருடியவர்களை தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மடக்கிப் பிடித்து தம்மிடம் ஒப்படைத்துள்ளனர் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் நவீன சந்தைத் தொகுதியில் உள்ள அழகுப்பொருள், புடவை கடைகள் உடைத்து உட்புகுந்த திருடர்கள் அவ்விரு கடைகளிலும் இருந்த 6000 ரூபா மற்றும் 10,000 ரூபா பணத்தை திருடியுள்ளனர். இதன்போது அங்கு கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் திருடர்களின் நடமாட்டத்தை அவதானித்து, ஒருவரை மடக்கிப் பிடித்தனர்.
மேலும் இருவர் அங்கிருந்து தப்பியோடி கண்டி பஸ்ஸில் ஏறி மாயமாகியுள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதும் பஸ்ஸை வழிமறித்த வவுனியா பொலிஸார் குறித்த இரு நபர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள மூவரும் ஹற்றன் மற்றும் எட்டியாந்தோட்டைப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவார். அவர்களிடம் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





