
பாகிஸ்தானின் முன்னணி மருத்துவப் பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்வியைத் (MBBS) தொடர்வதற்காக 25 இலங்கை மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அலாமா இக்பால் (Allama Iqbal) புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் பாகிஸ்தானைச் சென்றடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மருத்துவக் கல்விக்காக கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த மாணவர்களுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் பாகிஸ்தான் மற்றும் இலங்கை உயர்கல்வி ஒத்துழைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.
அதே போன்று, இந்த திட்டத்தை பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணைக்குழு (HEC) நிர்வகித்து வருகின்றது.
இந்நிலையில், மாணவர்கள் கராச்சியில் உள்ள முதலிட சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் (DUHS) மற்றும் லியாகுத் மருத்துவ மற்றும் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் (LUMHS) ஆகியவற்றில் தமது கல்வியைத் தொடரவுள்ளனர்.
மேற்கூறப்பட்ட இரண்டு பல்கலைக்கழகங்களும் இலங்கை மருத்துவ சபையினால் (SLMC) முறையாக அங்கீகரிக்கப்பட்டவை என்பதால், அங்கு பெறப்படும் பட்டங்கள் சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றவை.
430 மாணவர்களுக்கு வாய்ப்பு

தற்போது பாகிஸ்தானைச் சென்றடைந்துள்ள மாணவர்களைத் தவிர, ஏற்கனவே 430-க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் இப்புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் பாகிஸ்தானில் கல்வி பயின்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செல்லும் மாணவர்கள் மருத்துவக் கல்வி மாத்திரமல்லாது பொறியியல், வணிகக் கல்வி, இயற்கை அறிவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற பல்வேறு துறைகளிலும் கல்வி கற்கிறார்கள்.
பாகிஸ்தானின் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தகுதி அளவுகோல்களின்படி, மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த நேர்முகத் தேர்வுகள் மற்றும் பரீட்சைகள் மூலமே இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதே திட்டத்தின் கீழ், மேலும் 100 இலங்கை மாணவர்கள் விரைவில் பாகிஸ்தானுக்குச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





