
புதிய இணைப்பு : மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் காரணமாக, மத்திய கிழக்கு இடங்களுக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் இன்று (03) இரத்து செய்ய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முடிவு செய்துள்ளது.
தீவிரமடையும் போர் பதற்றம் மற்றும் வான்வெளி மூடல்களை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் இணைப்பு : கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணிக்க திட்டமிடப்பட்ட 57 விமானங்கள் இன்று (03) இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு : மத்திய கிழக்கில் வான்வெளி மூடப்பட்டதால், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நேற்று (02) நள்ளிரவு 12.00 மணி முதல் இன்று நள்ளிரவு 12.00 மணி வரை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் 33 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தக் காலகட்டத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்படவிருந்த 32 விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
4 விமானங்கள் கட்டுநாயக்கவில் தரையிறக்கம்
மத்திய கிழக்கிலிருந்து இலங்கைக்கு வந்த கல்ஃப், ஏர் அரேபியா, ஃப்ளை துபாய் மற்றும் கத்தார் ஏர்வேஸ் ஆகிய 04 விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நாடுகளுக்குத் திரும்ப முடியாமல் தவிப்பதாகவும் விமான நிலையப் பொறுப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்ற மத்திய ஆசிய நாடுகள், ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனா, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற தூர கிழக்கு நாடுகளுக்கான விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.
விசா காலம் முடிந்தும் நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான விசாக்களை மேலும் 14 நாட்களுக்கு கட்டணம் வசூலிக்காமல் நீட்டிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது,
மாற்று விமான சேவைகளை ஏற்பாடு
மேலும் அவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப மாற்று விமான சேவைகளை ஏற்பாடு செய்யவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 115 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக கிட்டத்தட்ட 10,000 சுற்றுலாப் பயணிகள் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப முடியாமல் இலங்கையில் சிக்கித் தவிக்கின்றனர்.





