யாழில் விளம்பரத்தை நம்பி மோசம்போன இளைஞன் : மாயமான தம்பதி!!

14

யாழில் சமூக வலைத்தளத்தின் மூலம் ‘காஸ் குக்கர்’ (GAS COOKER)விற்பனை செய்வதாக கூறி தம்பதிகள் மோசடி செய்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நவீன ரக காஸ் குக்கர் (GAS COOKER) விற்பனைக்கு உள்ளதாக முகநூலில் வெளியிடப்பட்ட விளம்பரத்தை நம்பி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருந்த நபர்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்.

அதன்போது, காஸ் குக்கரை (GAS COOKER)பெறுவதற்காக பணத்தை தங்களது வங்கி கணக்கில் வைப்பிலிடுமாறும், வாட்ஸ்அப் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, காஸ் குக்கரின் விலை எனக் கூறப்பட்ட 32 ஆயிரம் ரூபாயை அவர்கள் வழங்கிய வங்கி கணக்கு இலக்கத்திற்கு வைப்பிலிட்ட இளைஞன் , அதற்கான தகவலை வாட்ஸ்அப் மூலம் அறிவித்துள்ளார்.

பின்னர் காஸ் குக்கரை அனுப்பி வைப்பதாக கூறிய நபர்கள், இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை பல்வேறு காரணங்களை கூறி அவரை ஏமாற்றிய பின்னர், பொருளை அனுப்பி வைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

காஸ் குக்கர் (GAS COOKER)அனுப்பி வைக்கப்பட்டதற்கான ஆதாரத்தை கேட்டபோது, அவர்கள் பயன்படுத்தியிருந்த வாட்ஸ்அப் இலக்கத்தை உடனடியாக அழித்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து சந்தேகம் ஏற்பட்டதால், பாதிக்கப்பட்ட நபர் அந்த முகநூல் கணக்கில் பயன்படுத்தப்பட்டிருந்த முகப்பு புகைப்படத்தை ஆராய்ந்தபோது அந்த புகைப்படம் ஒரு புகைப்படக்காரர் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியிருந்த தம்பதியினரின் படம் என்பதும், மோசடிக்காரர்கள் அதனை பயன்படுத்தியிருந்ததும் தெரியவந்துள்ளது.

தாம் மோசடிக்குள்ளானது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதேவேளை சமூக வலைத்தள் போலி விளம்பரங்கள் தொடர்பில் பொலிஸார் மக்களுக்கு ஏற்கனவே பல தடைவை எச்சரிக்கை விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.