இலங்கையில் அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கும் எரிபொருள் விலை : குறைக்கும் சந்தர்ப்பத்தை அறிவித்த அதிகாரி!!

117

எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள திடீர் அதிகரிப்பைக் தடுக்கும் நோக்கில் நோக்கில் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையை அதிகரித்ததாக பெட்ரோலிய மொத்த விற்பனை முனையங்கள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மயூர நெத்தி குமார தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டில் ஏற்படுத்தப்பட்ட திடீர் எரிபொருள் விலை உயர்வுக்கான காரணங்களையும் அவர் இதன்போது விளக்கினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அடுத்து வரும் மாதங்களில் எரிபொருள் விலை திடீரென உயர்வதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பொதுவாக, கடந்த மாத எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படும். தற்போது எங்களிடம் 30 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு நிலையாக உள்ளது.

எனினும், அடுத்த மாதத்திற்காக வரவிருக்கும் கப்பல்களில் உள்ள எரிபொருளின் விலை பெருமளவில் அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் எங்களிடம் தற்போது உள்ள எரிபொருள் இருப்பைப் பாதுகாக்கும் அதேவேளை, விலையைச் சமநிலைப்படுத்துவதற்கும் நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.

அதன்படி, எரிபொருள் விலையில் திடீர் அதிகரிப்பைத் தடுக்கவும், கிடைக்கக்கூடிய இருப்புகளை மாதங்களுக்கு இடையில் சமநிலையில் பேணுவதற்கும், விலைகளை அதிகரித்தோம்.

மேலும், உலக சந்தையில் விலை குறைந்தால் அடுத்த சில நாட்களுக்குள் எமது நாட்டிலும் எரிபொருளின் விலையை நிச்சயமாகக் குறைக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.