அறிகுறிகள் தென்பட்டால் உடன் வைத்திய உதவியை நாடவும் : பொது மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்!!

16

இலங்கையில் தற்போது வேகமாக பரவி வரும் எலிக்காய்ச்சல் (Leptospirosis) தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல் (Leptospirosis) சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், கிட்டத்தட்ட 300 மரணங்கள் சம்பவித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் துஷானி தாபரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

கடும் காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, தசை வலி மற்றும் கண்கள் சிவப்படைதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை உதாசீனம் செய்ய வேண்டாம் எனவும், சிக்கல்களை தவிர்க்க உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும் நிபுணர்கள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர்.

நோய்த்தொற்றுள்ள விலங்குகளின் சிறுநீர் கலந்த நீர் அல்லது மண்ணுடன் மக்கள் தொடர்பு கொள்ளும்போது, தோலில் உள்ள காயங்கள் அல்லது சளிச்சவ்வு வழியாக பாக்டீரியாக்கள் உடலுக்குள் நுழைகின்றன என்று வைத்தியர் தாபரேரா விளக்கியுள்ளார்.

அதிக அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் பணிபுரிபவர்கள், குறிப்பாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவிறுத்தப்பட்டுள்ளது.

அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காது சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.