தாலி கட்டும்வரை காதலனை கைது செய்ய வேண்டாம் : பொலீசிடம் கெஞ்சிய மணப்பெண்!!

16

தாலி கட்டும்வரை மணமகனை விடுவிக்குமாறு மணப்பெண் காவல்துறையினரிடம் கெஞ்சியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கடந்த மார்ச் 11 ஆம் திகதி அன்று பூரா ஹடி என்று அழைக்கப்படும் ஆகாஷ் என்பவருக்கும் சீமா என்ற அவரது காதலிக்கும் திருமணம் நடைபெற இருந்தது.

திருமண ஏற்பாடு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்த சூழலில், திருமண மண்டபத்திற்கு வந்த காவல்துறையினர் மணமேடையில் இருந்த மணமகன் ஆகாஷ் கைது செய்து அழைத்து சென்றனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண் உடனடியாக காவல்நிலையத்திற்கு விரைந்து, மண்டபத்தில் விருந்தினர்கள் காத்துக்கொண்டுள்ளனர். திருமண சடங்குகள் முடிந்து தாலி கட்டும் வரை அவரை அனுமதியுங்கள். அதன் பின்னர் கைது செய்து கொள்ளுங்கள் என காவல்துறையினரிடம் அழுதபடியே கெஞ்ச துவங்கியுள்ளார்.

ஆனால் காவல்துறையினர் அதற்கு சம்மதிக்கவில்லை. காவல்நிலையத்தில் வைத்தே திருமண உறுதிமொழிகளை மேற்கொள்ள அனுமதி கேட்டுள்ளார். அதற்கு காவல்துறை ஒப்புக்கொள்ளவில்லை. சீமாவும், ஆகாஷும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆகாஷின் கூட்டாளிகளான ராஜம்ஜி தாக்கூர், அபிஷேக் உபாத்யாய், அபிஷேக் மீனா, நீரஜ் காங்கே மற்றும் அமித் ஓஸ்வால் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆகாஷ் மீது கொலை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ள 31 வழக்குகள் உள்ளது. சட்டவிரோத கும்பல்” என்ற பெயரில் அழைக்கப்படும் இந்தக் கும்பல் 2018 முதல் போபாலில் செயல்பட்டு வருகிறது.

வாஜ்பாய் நகரைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்தக் குழுவில் இருந்தனர், அவர்களில் பலர் விசுவாசம் மற்றும் அடையாளத்தின் அடையாளமாக தங்கள் கழுத்தில் “illegal” என்ற வார்த்தையை பச்சை குத்தியுள்ளனர்.

2024 ஆம் ஆண்டில் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷ், 18 மாதங்கள் சிறையில் இருந்த அவர், 4 மாதங்களுக்கு முன்பே ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

26 வயது பூசாரியை கடத்தி ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அடைத்து வைத்து தாக்கி ரூ.8 லட்சம் செலுத்துமாறு மிரட்டினர். பணம் செலுத்தாவிட்டால் என்னுடைய காதலியை துஸ்பிரயோகம் செய்ததாக பொய் புகாரில் சிக்க வைத்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

முதலில் ரூ.50,000 ஆன்லைன் மூலம் செலுத்துமாறும், மீதமுள்ள தொகையை படிப்படியாக செலுத்துமாறும் கூறியுள்ளனர். தனது திருமண செலவிற்காகவே ஆகாஷ் இந்த கடத்தலை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர் அளித்த புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.