மயானத்தில் பெண்ணின் சடலத்தை தோண்டி நகைகளை திருட முயற்சி : தப்பியோடிய மர்ம நபர்கள்!!

47

மொரட்டுவை, லக்ஷபதிய பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலத்திலிருந்த நகைகளை திருடும் நோக்கில், மர்ம நபர்கள் மயானத்திலுள்ள சவப்பெட்டியைத் தோண்டியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக லக்ஷபதிய பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த தனது தாயாருக்கு ‘இமிடேஷன்’ ரக மாலை, காதணி மற்றும் வளையல்களை அணிவித்து உடல் அடக்கம் செய்யப்பட்டது என்று மகள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தாயார் உயிரிழந்து ஏழாம் நாள் நினைவாக மயானத்தில் மெழுகுவர்த்தி ஏந்துவதற்காகச் சென்றபோது, இருவர் சவப்பெட்டியைத் தோண்டிக்கொண்டிருந்த நிலையில், அவரை கண்டதும் அங்கிருந்த இருவர் தப்பியோடியுள்ளனர்.

இதேவேளை, உயிரிழந்த பெண்ணின் உடல் மிகவும் விலையுயர்ந்த சவப்பெட்டியிலேயே அடக்கம் செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

சம்பவம் தொடர்பாக மயானத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தரைப் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

தப்பியோடிய இரு சந்தேக நபர்களும் மொரட்டுவை மாநகர சபையின் ஊழியர்களாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன், மொரட்டுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.