100 டொலரை தாண்டிய எண்ணெய் விலை : ஆசிய பங்குச் சந்தைகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்!!

221

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச் சூழல், உலகளாவிய முதலீட்டாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் குறிப்பாக, ஈரான் மீதான தாக்குதல்கள் மற்றும் எண்ணெய் விநியோகத் தடை குறித்த அச்சத்தால் மசகு எண்ணெய் விலை பரலுக்கு 100 டொலரைத் தாண்டியுள்ளது.

இந்த எண்ணெய் நெருக்கடி காரணமாக, ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை வேகமாகத் திரும்பப் பெற்று வருகின்றனர்.

நேற்றைய தின நிலவரப்படி, ஜப்பான், தென் கொரியா மற்றும் தாய்வான் போன்ற முக்கிய ஆசிய சந்தைகளில் பங்குகள் பெரும் சரிவைக் கண்டன.

எண்ணெய் இறக்குமதியை அதிகம் நம்பியுள்ள ஆசிய நாடுகள், எரிபொருள் விலை உயர்வால் கடும் பணவீக்கத்தைச் சந்திக்க நேரிடும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்க டொலருக்கு நிகரான ஆசிய நாடுகளின் கரன்சி மதிப்புகளும் சரிந்துள்ள நிலையில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம் மற்றும் அமெரிக்கப் பத்திரங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.

ஈரானுடனான பேச்சுவார்த்தை குறித்த முரண்பாடான தகவல்கள் சந்தையில் ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்கியுள்ளன.

போர் நீடித்தால், ஆசியாவின் உற்பத்தி மற்றும் போக்குவரத்துத் துறைகள் முடங்கும் அபாயம் உள்ளதால், சர்வதேச நிதி நிறுவனங்கள் ஆசிய சந்தைகள் குறித்த தங்களின் மதிப்பீட்டைக் குறைத்துள்ளன.