இத்தாலியில் பணியாற்றிய இலங்கையரான பொலிஸ் அதிகாரி மர்மமான முறையில் மரணம்!!

508

இத்தாலிய பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த ஒரே இலங்கை அதிகாரியான ஷெஹான் பெர்னாண்டோ, மிலனில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வென்னப்புவ, தல்டேனாவைச் சேர்ந்த 27 வயதான ஷெஹான், மிலனில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஷெஹான் பெர்னாண்டோவின் சடலம், அவரது பணித் துப்பாக்கியுடன் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஷெஹான் தனது பணித் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டாரா? அல்லது இது கொலையா? என இத்தாலிய பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

ஷெஹான் பெர்னாண்டோ, இத்தாலிய பொலிஸ் மற்றும் அந்நாட்டு மக்களிடையே மதிக்கப்பட்ட ஒரு அதிகாரியாக இருந்தார்.

இத்தாலிய பொலிஸ் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே இலங்கையர் அவர் என்பதால், அவரது மரணம் இத்தாலிய அதிகாரிகளையும், அந்நாட்டில் உள்ள இலங்கை சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அவரது பெற்றோரும் இத்தாலியில் வசித்து வருகின்றனர், அவர்களும் தங்கள் மகனின் இழப்பால் ஆழ்ந்த அதிர்ச்சியில் உள்ளனர். ஷெஹான் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்குகள் நாளை இத்தாலியின் மிலனில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.