அருண் செல்வராசனின் காதலியிடம் விசாரணை!!

343

Arun

பாகிஸ்தான் உளவாளி அருண்செல்வராசன் காதலியிடம் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

தமிழகத்தில் மிகப்பெரிய நாசவேலையில் ஈடுபடும் சதி திட்டத்துடன் இலங்கை தமிழரான அருண் செல்வராசன் உளவு பார்த்து வந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் உளவாளியாக மாறி மிகவும் துணிச்சலுடன் சென்னை சாலிகிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, ‘‘ஐஸ் ஈவண்ட் மேனேஜ்மெண்ட்’’ என்ற கம்பெனியையும் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தின் பல பகுதிகளில் அருண் செல்வராசன் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். யாரும் எளிதில் நுழைந்து விடமுடியாத துறைமுகம் உள்ளிட்ட பாதுகாப்பான பகுதிகளிலும் அருண் செல்வராசன் ஊடுருவி பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளார்.

இந்திய பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மற்றும் தமிழகத்தின் முக்கியமான இடங்கள் பலவற்றையும் அவர் புகைப்படம் எடுத்து வைத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் மற்றும் உளவு தகவல்கள் அனைத்தையுமே இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சித்திக், சிராஜ் அலி இருவருக்கும் அருண் செல்வராசன் அனுப்பி உள்ளார்.

இவர்கள் தான், அருண் செல்வராசனை உளவாளியாக மாற்றி தமிழகத்திக்கு அனுப்பி வைத்து இயக்கி வந்துள்ளனர்.

இந்நிலையில், சமீப காலமாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள அருண் செல்வராசனின் வீட்டுக்கும், நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்துக்கும் ஒரு இளம்பெண் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

தேசிய புலனாய்வு குழுவினர் நடத்திய விசாரணையில், சென்னையை சேர்ந்த அந்த பெண்ணை அருண்செல்வராசன் காதலித்து வந்ததும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணோடு அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, அருண் செல்வராசனின் காதலியிடம் இரகசிய விசாரணை நடத்திய பொலிசார் அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இதேபோன்று அருண் செல்வராசனுக்கு வாடகைக்கு வீடு அளித்த உரிமையாளர், நுங்கம்பாக்கம் அலுவலகத்தை வாடகைக்கு விட்டவர் மற்றும் அக்கம்பக்கத்தினரிடமும் அவரது நண்பர்களிடமும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை செய்து வருகின்றனர்.

-மாலைமலர்-