
வவுனியா – மகாறம்பைக்குளம் பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் ஒன்றில் இருந்து தலையை அகற்றிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் மூன்று மாதங்களிற்கு முன்னர் இளம் குடும்பஸ்தர் ஒருவர் அகால மரணமடைந்திருந்தார்.
அவரது சடலம் மரண விசாரணைகளின் பின்னர் கருப்பணிச்சான் குளம் மயானத்தில் புதைக்கப்பட்டிருந்தது.

தற்போது புதைக்கப்பட்ட இடத்தை மீண்டும் தோண்டி அதில் இருந்து உயிரிழந்தவரின் தலையை அடையாளம் தெரியாத நபர்கள் அகற்றிச் சென்றுள்ளதாக அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளதுடன், வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்துள்ளனர்.
அதே பகுதியில் அண்மையில் உயிரிழந்த ஒருவரின் இறுதிச்சடங்கு மயானத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, அந்தப் பகுதியில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது.
இதனையடுத்து பொதுமக்கள் அந்த பகுதியை நேரில் பார்வையிட்டு, அதன் பின்னர் குறித்த விடயம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக வவுனியா குற்றப்பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






