
வவுனியா – சாளம்பைக்குளத்தில் மாநகர சபை மற்றும் பிரதேச சபையினால் கொட்டப்படும் குப்பையின் காரணமாக அயலில் உள்ள சாளம்பைக்குளம் கிராம மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறிப்பிட்ட இடம் பார்வையிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் நேற்று(06.04.2026) அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையிலான குழுவினர் ஈடுப்பட்டுள்ளனர்.
நீண்ட காலமாக குறித்த பகுதியில் குப்பை கொட்டப்பட்டு வரும் நிலையில், அதனை அண்டிய பகுதியில் கடந்த காலங்களில் சாளம்பைக்குளம் புதிய வீட்டு திட்டம் அமைத்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக வவுனியா மாவட்டம் குப்பை அகற்றுவதற்கான ஒரு சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
1992ஆம் ஆண்டு முதல், சாளம்பைகுளம் பகுதியில் உள்ள ஒதுக்கப்பட்ட நிலத்தில் இந்தக் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் தற்போது ஒரு சிக்கலான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தக் குப்பைகளை அகற்றுவதற்கு முறையான அமைப்பு இல்லாததால் சுகாதார, சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பிரச்சனை எழுந்துள்ளது. 15 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ள இந்தக் குப்பைகளால் அருகிலுள்ள சாளம்பைகுளம் கிராமத்தில் வசிக்கும் சுமார் 500 குடும்பங்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
மேலும், மழைநீருடன் கலக்கும் கழிவுகளால், சுற்றியுள்ள கிணற்று நீர் மாசுபடுதல் மற்றும் சுவாச நோய்கள் தோன்றுதல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.
குழு நியமனம்

குறித்த பகுதியில் கொட்டப்பட்டு வருகின்ற குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு அங்கு தீ வைக்கப்படுவதன் காரணமாக புகைமூட்டம் கிராமத்துக்குள் வருவதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் தொடர்ச்சியாக தெரிவித்து வந்திருந்தனர்.
இந்த நிலைமை குறித்துக் கண்டறிய வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான திரு.உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்ரிஷாத் பதியுதீன்,
மாவட்டச் செயலாளர் பி.ஏ. சரத்சந்திர, உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரிகள், வனப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாநகரசபை, பிரதேச சபை ஆகியவற்றை உள்ளடக்கிய குழுவினர் சாளம்பைகுளம் பகுதிக்குச் சென்று பார்வையிட்டு இருந்தனர்.
அதன்பின், மாவட்ட செயலகத்தில் ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது. இங்கு, குப்பைகளை அகற்றுவதற்காக 03 சிறப்பு இடங்கள் முன்மொழியப்பட்டன.

வவுனியா செட்டிகுளம், இரணை இலுப்பபைகுளம் மற்றும் ஓமந்தை ஆகிய பகுதிகள் முன்மொழியப்பட்டு இவ் விடயத்தை ஆராய்ந்து ஒரு மாதத்திற்குள் தீர்வு காண்பதற்காக ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது.
மேலும், மாநகர சபையால் தினந்தோறும் கொண்டுவரப்படும் குப்பைகளை மண் கொண்டு மூடும் பணி மாநகர சபையால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
இப்பணிக்காக இரண்டு அதிகாரிகளை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த முன்மொழிவுகளைச் செயல்படுத்துவதன் மூலம் 500 குடும்பங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.





