
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஆஸ்திரேலிய நாடக ஆசிரியரான எஸ். சக்திதரன் (சக்தி), சர்வதேச அளவில் மிக உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான ‘வின்டம்-கேம்ப்பெல்’ (Windham-Campbell Prize) விருதினை வென்று சாதனை படைத்துள்ளார்.
நாடகத் துறைக்கான பிரிவில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருது, 1,75,000 அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையைக் கொண்டது.\ எழுத்தாளர்களின் ஒட்டுமொத்தப் படைப்பாற்றலை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதுக்கு எழுத்தாளர்கள் நேரடியாக விண்ணப்பிக்க முடியாது; நடுவர் குழுவினரால் ரகசியமாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கே இந்த விருது வழங்கப்படுகிறது.
இலங்கைத் தமிழ் அகதிகளின் வாழ்வியலையும், தலைமுறை கடந்த இடப்பெயர்வு அனுபவங்களையும் மையமாகக் கொண்டு சக்திதரன் எழுதிய கவுண்டிங் என் கிரக்கிங் ‘Counting and Cracking’ மற்றும் தி ஜங்கல் என்ட் சீ ‘The Jungle and the Sea’ போன்ற படைப்புகளுக்காக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
குறிப்பாக, ‘Counting and Cracking’ நாடகம் ஏற்கனவே 2020-ஆம் ஆண்டில் 1,00,000 டொலர் மதிப்பிலான ‘விக்டோரியன் இலக்கியப் பரிசை’ வென்றதுடன், லண்டன் மற்றும் நியூயார்க் நகரங்களிலும் மேடையேற்றப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.
1983 கருப்பு ஜூலை கலவரத்தினால் பாதிக்கப்பட்டு இலங்கையிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குள்ளான தனது குடும்பப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டே சக்தி தனது படைப்புகளை உருவாக்கியுள்ளார்.
தற்போது இலங்கையில் தனது முதல் திரைப்படமான தி லாப் ஒப் லக்ஷ்மி ‘The Laugh of Lakshmi’ படப்பிடிப்பில் சக்திதரன் ஈடுபட்டுள்ளார். எங்கள் கதைகள் உலக மேடையில் இடம்பிடித்திருப்பது பெருமையளிக்கிறது என அவர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
ஆசிய மற்றும் ஆஸ்திரேலியா சார்ந்த இந்தக் கதைகள், என்னைப் பற்றி அறியாத கடல் கடந்த ஒரு நடுவர் குழுவை ஈர்த்துள்ளது என்பது எழுத்தின் வலிமையைக் காட்டுகிறது என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
சக்திதரன் தற்போது மேற்கு சிட்னியில் ‘குறிஞ்சி’ (Kurinji) எனும் நாடக நிறுவனத்தின் இயக்குநராகவும், இணை நிறுவனராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





