
கேரள சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், திருச்சூரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் அரங்கேறிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
கூர்க்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த 26 வயதான அக்சயா என்ற இளம்பெண் தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்தார்.
ஆனால், அவர் சமையல் செய்தபோது இடது கை ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டு கட்டு கட்டப்பட்டிருந்ததால், அந்த விரலில் மை வைக்க முடியாது என வாக்குச்சாவடி அதிகாரி அவரை அதிரடியாகத் தடுத்தார்.
தேர்தல் விதிமுறைப்படி ஆள்காட்டி விரலில் தான் மை வைக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்த அதிகாரி, இளம்பெண் காட்டிய மருத்துவச் சான்றிதழையும் ஏற்க மறுத்துவிட்டார்.
மேலும், அந்த இளம்பெண்ணின் கையில் இருந்த கட்டை அவிழ்த்துக் காயத்தைப் பார்க்க வேண்டும் என்று அவர் கட்டாயப்படுத்தியதால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த விவகாரம் காட்டுத்தீ போலப் பரவிய நிலையில், அந்தத் தொகுதியின் இடதுசாரி முன்னணி வேட்பாளர் சுனில் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அதிகாரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தப் போராட்டத்திற்குப் பிறகு, தகவல் அறிந்து மாவட்ட கலெக்டர் உடனடியாகத் தலையிட்டு உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
ஆள்காட்டி விரலில் காயம் இருந்தால் அதற்கு அடுத்த விரலில் மை வைக்கலாம் என்கிற விதிமுறையைச் சுட்டிக்காட்டிய கலெக்டர், அந்த இளம்பெண்ணை வாக்களிக்க அனுமதிக்குமாறு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அக்சயாவின் நடுவிரலில் மை வைக்கப்பட்டு அவர் தனது வாக்கைப் பதிவு செய்தார். ஒரு சிறிய காயத்திற்காக வாக்கு மறுக்கப்பட்ட சம்பவம் திருச்சூரில் சிறிது நேரம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.





