இரட்டை தேவதைகளுக்கு விஷம் கொடுத்துக் கிணற்றில் வீசிய கொடூர தந்தை!!

23

மனிதாபிமானமற்ற முறையில் தனது 4 வயது இரட்டைப் பெண் குழந்தைகளைக் கொலை செய்த தந்தையைத் தெலங்கானா மாநில போலீசார் கைது செய்துள்ளனர். ஆண் வாரிசு இல்லை என்ற ஆணாதிக்க மனப்பான்மையே இந்தத் துயரத்திற்குப் பின்னணியாக இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம், ஜூபிலி நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீசைலம். இவருக்கு 4 வயதில் இரட்டைப் பெண் குழந்தைகள் இருந்தனர். தனக்கு ஆண் குழந்தை இல்லை என்ற விரக்தியில் ஸ்ரீசைலம் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நேற்று மீண்டும் தம்பதியிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஸ்ரீசைலம், தனது பிஞ்சு குழந்தைகளைத் தனியாக அழைத்துச் சென்றுள்ளார். அவர்களுக்குப் பூச்சிக்கொல்லி மருந்தை வலுக்கட்டாயமாகப் புகட்டி, பின்னர் அங்குள்ள விவசாயக் கிணற்றில் வீசியுள்ளார்.

குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள், கிணற்றில் இருந்து குழந்தைகளை மீட்க முயன்றனர். ஆனால், அதற்குள்ளாகவே குழந்தைகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தப்பியோட முயன்ற ஸ்ரீசைலத்தை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து, பின்னர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஸ்ரீசைலம் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.