கவலையை ஏற்படுத்தும் புறக்கோட்டை பேரூந்து நிலையத்தின் தற்போதய நிலை : மக்களுக்கு கடும் எச்சரிக்கை!!

221

புதிதாக திறக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தில் பல பகுதிகளில் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதுடன், பெண்கள் கழிவறைகளில் பொருத்தப்பட்டிருந்த நீர்க்குழாய்கள் கழற்றி செல்லப்பட்டுள்ளன.

இந்நிலையில் புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கும் நபர்களுக்கு எதிராகத் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

இன்று (10) காலை பஸ் நிலையத்திற்கு நேரடி கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பஸ் நிலையத்தின் சொத்துக்கள் சேதப்படுத்தப்படுவது ஒரு திட்டமிட்ட குழுவின் செயல் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இதனைத் தடுக்கக் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், குறிப்பாகப் பெண்கள் கழிவறைகளில் பொருத்தப்பட்டிருந்த நீர்க்குழாய்கள் முதல் நாள் திருடப்பட்டிருந்தன.

அவை மீண்டும் பொருத்தப்பட்ட நிலையில், நேற்று (09) இரவும் இரண்டாவது முறையாக அவை கழற்றிச் செல்லப்பட்டுள்ளன. இது அறியாமையினால் செய்யப்படும் செயலல்ல, மாறாகத் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் ஒரு சதி முயற்சி.

அரசியல் ரீதியாகப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் பொதுமக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த இன்று விசேட பாதுகாப்பு கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளது. அடுத்த மூன்று மாத காலத்திற்கு பஸ் நிலையத்தின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக இலங்கை விமானப்படையினர் ஒத்துழைப்பு வழங்க இணங்கியுள்ளனர்.

தற்போது அங்குள்ள CCTVகெமராக்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்பதால், கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த மேலதிக கெமராக்களைப் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சமூக வலைத்தளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும் அவதூறுப் பிரச்சாரங்கள் ஒருபுறமிருக்க, பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ள பிரதி அமைச்சர், சட்டத்தை மீறுவோருக்கு எதிராகக் கடுமையான தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.