ஹந்தானை மலைப்பகுதியில் காணாமல்போன யூடியூபர்!!

182

ஹந்தானை மலைப்பகுதியில் அரிய காட்சிகளை வீடியோ எடுக்கச் சென்று காணாமல்போன யூடியூபர் ஒருவரை இராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

ஹந்தானை மலைத்தொடரின் ஓணான் முதுகு அல்லது ‘கட்டுஸா கொண்ட’ என்றழைக்கப்படும் பகுதியில் குறித்த நபர் ஏறிச் சென்றபோது வழிதவறி காணாமல் போயிருந்தார். அதனையடுத்து, அவரை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட யூடியூபர் முன்னதாக ஹந்தானை பகுதியில் வசித்தவர் என்றும், பின்னர் கொழும்பில் குடியேறியவர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மீட்கப்பட்ட யூடியூபர் மலை ஏறி அரிய காட்சிகளைப் படம் பிடிப்பதில் ஆர்வம் கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் ஹந்தானையின் மிக உயர்ந்த பகுதியான “கட்டுஸ்ஸ கொண்ட” பகுதியில் சிக்கியிருப்பதாக கண்டி பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், அந்த மலை உச்சியில் நிலவும் கடும் ஆபத்தான சூழல் காரணமாக அவரை மீட்பது மிகவும் கடினமான காரியமாக இருந்துள்ளது.

இதனையடுத்து, கண்டி பொலிஸார் அந்த மலைப் பிரதேசம் அமைந்துள்ள கலஹா மற்றும் பேராதனை பொலிஸ் நிலையங்களுடன் இணைந்து மீட்பு நடவடிக்கையை ஆரம்பித்த நிலையில், குறித்த நபர் பத்திரமாக மீட்கப்பட்டதாக கூறப்படுகின்றது.