
திருகோணமலை சோமாவதி ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தபோது மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன நிலையில், ஒருவரின் சடலம் இன்று (15) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மூன்று சகோதரர்களும் சோமாவதி வீதி, சேருநுவர-ஜெமுனுபுர பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களில் 35 வயதுடையவரே சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தந்தை மற்றும் நான்கு மகன்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (14) மாலை சோமாவதி பாலத்துக்கு கீழ் உள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது அதில் மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயிருந்தனர்.
அவர்கள் மூவரையும் தேடும் பணிகள் நேற்று மாலை தீவிரமாகியிருந்தபோதிலும் காணாமல்போனவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில் மீண்டும் இன்று காலை மீட்புப் பணிகள் தொடரப்பட்டபோது காணாமல்போன சகோதரர்களில் ஒருவரின் சடலம் மாத்திரம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் காணாமல்போன மற்றைய இருவரையும் தேடும் பணிகள் தொடர்வதோடு, மேலதிக விசாரணைகளில் சேருநுவர பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.





