
தென்னிலங்கையில் உயிர்களை காவு வாங்கும் கடற்கரை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காலி, ஹபரதுவ கொக்கல கடற்கரைப் பூங்காவிற்கு அருகில் கடலில் நீராடிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
கட்டுநாயக்க பகுதியை சேர்ந்த 25 வயதுடைய ஜுட் ஷெவந்த பெரேரா மற்றும் 21 வயதுடைய என்டன் ஷெனாவ் பெரேரா ஆகிய இரு சகோதரர்களே இவ்வாறு உயிரிழந்தவர்களாகும்.
அவர்கள் நீரில் அடித்துச் செல்லப்படுவதை கண்ட ஹபராதுவ பொலிஸாரும், அருகிலுள்ள சுற்றுலா விடுதி உயிர்காப்புப் பிரிவினரும் அவர்களை மீட்டு மீபே பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே அவர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த கடற்பகுதி நீராடுவதற்கு மிகவும் அபாயகரமானது என அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கடற்கரை பகுதியில் ஏற்கனவே பலர் நீரில் மூழ்கி ஆபத்துக்குள்ளான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.





