
கனடாவில் 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த தமிழ் குடும்பத்திற்கான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, தற்போது அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
2022 ஒக்டோபர் 12ஆம் திகதி மார்க்கம் வீதி – எல்சன் வீதி சந்திப்பில் டிரக் மற்றும் கார் மோதியதில், ஒரு தாயும் அவரது இரு பிள்ளைகளும் உயிரிழந்தனர்.
பிள்ளைகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தாயார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தில் பதீரனா புவனேந்திரன், நெலுக்சனா புவனேந்திரன் மற்றும் ஸ்ரீரதி சண்முகநாதன் ஆகியோர் உயிரிழந்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் மில்டன் நீதிமன்றம் நேற்று (17.04.2026) தீர்ப்பு வழங்கியது. விபத்துக்குக் காரணமான வாகன சாரதி அனுபவமிக்கவர் என்றும், அன்றைய காலநிலை காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையே விபத்திற்குக் காரணம் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

அதேவேளை, இந்த தீர்ப்பு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் பொதுமக்களுக்கும் திருப்தி அளிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டது. இறுதியில், குற்றம்சாட்டப்பட்ட நபர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டதுடன் எந்தவித தண்டனையும் விதிக்கப்படவில்லை.
இந்த தீர்ப்பு மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நீதிமன்ற வளாகம் முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கு தொடர்பாக முன்னதாக குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில், தனது மனைவி மற்றும் பிள்ளைகளை இழந்த புவனேந்திரன், சமூக ஊடகங்கள் வழியாக நீதி கோரி மக்களை ஒன்றிணைய அழைப்பு விடுத்திருந்தார்.
அவரின் அழைப்பைத் தொடர்ந்து பெருந்திரளானோர் இன்று நீதிமன்றம் முன்பு திரண்டிருந்தனர்.
மேலும், இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், கனேடிய நாடாளுமன்றத்தில் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் இதற்காக குரல் கொடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





