மன்னாரில் உயிரிழந்த குழந்தையின் சடலம் நீதிமன்ற உத்தரவில் மீள அகழ்வு!!

141

மன்னார், தாராபுரம் பகுதியில் விபத்தில் உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்ட ஒரு வயதுடைய குழந்தையின் சடலம், நீதிமன்ற உத்தரவிற்கமைய நேற்று செவ்வாய்க்கிழமை (21) தோண்டி எடுக்கப்பட்டது.

மன்னார் தாராபுரம் கிழக்கு, துருக்கி சிற்றி பகுதியில் கடந்த 18ஆம் திகதி மாலை, பாண் விற்பனைக்காக வந்த மின்சார முச்சக்கர வண்டி ஒன்றில் மோதி ஒரு வயது மற்றும் 7 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்தது.

விபத்தின் பின்னர் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 19ஆம் திகதி குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, தாராபுரம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

குறித்த விபத்து மற்றும் மரணம் தொடர்பில் மன்னார் பொலிஸார் முறையான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனவும், அவசரமான முறையில் உடல் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டது.

இது தொடர்பான முறைப்பாட்டைத் தொடர்ந்து, விடயம் மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

நிலைமையை ஆராய்ந்த நீதவான், மரணம் குறித்த மேலதிக விசாரணைகளுக்காக சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார். இதற்கமைய, நேற்று (21) காலை மன்னார் நீதவான் முன்னிலையில் தாராபுரம் மையவாடியில் குழந்தையின் சடலம் மீள அகழ்ந்து எடுக்கப்பட்டது.

இந்த அகழ்வுப் பணியின் போது மன்னார் பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகள் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பிரசன்னமாகியிருந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.