
தற்போது வரை ஒரு நாள் என்பது 24 மணி நேரம் என்ற கணக்கீட்டில் உள்ல நிலையில் எதிர்காலத்தில் ஒரு நாளுக்கு 25 மணி நேரம் இருக்கும் என நாசா விஞ்ஞானிகள் மற்றும் வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பூமியின் சுழற்சியில் ஏற்பட்டு வரும் மாற்றங்களே இதற்கு முக்கியக் காரணம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதோடு, சூரியனையும் சுற்றி வருகிறது.
நிலவு மற்றும் பூமிக்கு இடையே நடைபெறும் இந்த ஈர்ப்பு விசை ஆற்றல் பரிமாற்றத்தின் காரணமாக, பூமியின் சுழலும் வேகம் மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது. கடல்களில் ஏற்படும் அலைகளின் சீற்றத்திற்கும் நிலவின் ஈர்ப்பு விசைக்கும் தொடர்பு உள்ளது.
இந்த அலைகளின் உராய்வு காரணமாக பூமியின் சுழற்சி வேகம் பாதிக்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்த ஆற்றல் மாற்றத்தால் நிலவு பூமியை விட்டு ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறிய அளவில் மெதுவாக விலகிச் செல்கிறது.
இந்த மாற்றம் நாளை அல்லது அடுத்த வருடம் நடந்துவிடாது. இது ஒரு மிக நீண்ட கால அறிவியல் சுழற்சியாகும். விஞ்ஞானிகளின் துல்லியமான கணிப்புப்படி, ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கும் பூமியின் சுழலும் வேகம் 1.7 மில்லி செகண்டுகள் என்ற அளவில் குறைந்து வருகிறது.
இந்த சுழற்சி வேகம் குறைந்து, நமது தற்போதைய 24 மணி நேரத்தோடு மேலும் ஒரு முழு மணி நேரம் (அதாவது 25 மணி நேரம்) கூடுதலாகச் சேர சுமார் 200 மில்லியன் (20 கோடி) வருடங்கள் ஆகும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பூமி தோன்றிய காலகட்டத்தில் அதன் சுழற்சி வேகம் மிக அதிகமாக இருந்தது. அப்போது ஒரு நாள் என்பது வெறும் 18 மணி நேரமாக மட்டுமே இருந்துள்ளது.
அதன் பிறகு பல மில்லியன் ஆண்டுகள் கழித்து, பூமியில் ராட்சச டைனோசர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் சுழற்சி வேகம் சற்றே குறைந்து ஒரு நாளுக்கு 23 மணி நேரமாக மாறியுள்ளது. படிப்படியாகக் குறைந்து தான் தற்போது நாம் வாழும் காலத்தில் 24 மணி நேரமாக நிலைபெற்றுள்ளது.
எனவே, சுழற்சி வேகம் குறைவதும், நாட்களின் நேரம் அதிகரிப்பதும் இயற்கையான ஒரு பிரபஞ்ச நிகழ்வுதான் என்பதை இந்த ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன.
அதேசமயம் 20 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு வரப்போகும் இந்த 25 மணி நேர மாற்றத்தை தற்போதைய மனித குலம் காணப்போவதில்லை என்றாலும், பிரபஞ்சத்தின் ஆச்சரியங்களில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.




