சகோதரனுக்காக உயிரை விட்ட பொலிஸ் அதிகாரி : புத்தாண்டு நிகழ்வில் கொடூரம்!!

166

வலஸ்முல்ல, போவல பகுதியில் நடைபெற்ற சித்திரை புத்தாண்டு விழாவின் இறுதியில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த, வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புத்தாண்டு விழா நடைபெற்ற இடத்தை சுத்தம் செய்துகொண்டிருந்த தனது சகோதரனை ஒரு குழுவினர் தாக்குவதாகக் கிடைத்த தகவலையடுத்து, அவர் தனது காரில் அந்த இடத்திற்குச் சென்றுள்ளார்.

அங்கு தனது சகோதரனைக் காப்பாற்ற முயன்றபோது, எதிர்த்தரப்பைச் சேர்ந்த ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட கூர்மையான ஆயுதத் தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து அவர் வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கும், அதன் பிறகு கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டார்.

இதன்படி, அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (24) அவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக வலஸ்முல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.