கேக் பூசியதால் ஆத்திரம் : பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பறிபோன மூன்று உயிர்கள்!!

25

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சிறிய தகராறு மூன்று இளைஞர்களின் உயிரைப் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கையில், உத்தரப்பிரதேசம் புலந்த்சாஹர் மாவட்டம் குர்ஜா நகர் பகுதியில் நேற்று இரவு ஜீது சைனி என்பவரது பிறந்தநாள் விழா ஜிம் ஒன்றில் நடைபெற்ற போது,

அவரது நண்பர்களான அமர்தீப் சைனி, மனீஷ் சைனி மற்றும் ஆகாஷ் சைனி ஆகியோர் விளையாட்டாக ஜீதுவின் முகத்தில் கேக் பூசியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஜீது சைனிக்கும் நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தகராறுக்குப் பின்னர் அங்கிருந்து சென்ற ஜீது சைனி, சிறிது நேரத்தில் தனது கூட்டாளிகளுடன் ஏழு துப்பாக்கிகளுடன் மீண்டும் வந்து நண்பர்களை நோக்கிச் சரமாரியாகச் சுட்டுள்ளார்.

இதில் மூன்று நண்பர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தடயங்களைச் சேகரித்து வருவதுடன், தலைமறைவாக உள்ள கொலையாளிகளைப் பிடிக்க ஆறு தனிப்படைகளை அமைத்துள்ளனர்.

இது ஒரு திட்டமிட்ட கொலை என்று உயிரிழந்த அமர்தீப்பின் சகோதரர் குற்றம் சாட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.