
தனியார் மற்றும் வர்த்தக வாகனங்கள் உட்பட மார்ச் மாதத்தில் இலங்கை 195 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை 613 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வாகன இறக்குமதி செலவினம் 900 சதவீதம் அதிகரித்திருந்தாலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் வாகன இறக்குமதி இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், ஏப்ரல் மாதம் முதல் நாட்டிற்கான வாகன இறக்குமதி படிப்படியாக அதிகரித்து, ஆண்டின் இறுதியில் மொத்த வாகன இறக்குமதி செலவினம் 2.047 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்துள்ளது.
இருப்பினும், கடந்த ஆண்டின் முதல் காலாண்டில், நாட்டின் வாகன இறக்குமதி செலவினம் 61 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்துள்ளது.
இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், கடந்த ஆண்டு இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




