மின்னணு கடவுச்சீட்டு தொடர்பில் வெளியாகும் செய்திகள் : அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

21

இலங்கையின் மின்னணு கடவுச்சீட்டு (e-passport) திட்டத்திற்கான டெண்டர் வழங்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “இ-பாஸ்போர்ட் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை முற்றிலும் தவறானது.

ஏனெனில் இதுவரை யாருக்கும் டெண்டர் வழங்கப்படவில்லை; அதன் கொள்முதல் செயல்முறைகள் இன்னும் தொடர்ந்த வண்ணமே உள்ளன” என்றார்.

இந்த மின்னணு கடவுச்சீட்டு டெண்டர் நடைமுறைகள் முந்தைய அரசாங்கத்தின் காலத்திலேயே தொடங்கப்பட்டவை என்றும், அது தொடர்பாகச் சில நிறுவனங்கள் ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இ-பாஸ்போர்ட் திட்டத்தின் பொது விசை உள்கட்டமைப்பு (PKI) தொடர்பான ஒரு தனி டெண்டர் செயல்முறை தற்போது ஆய்வில் இருப்பதாகவும், தேர்வு முறை குறித்து ஒரு நிறுவனம் மேல்முறையீட்டுக் குழுவிடம் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், அமைச்சரவை இந்த விவகாரத்தைக் கொள்முதல் ஆணைக்குழுவின் (Procurement Commission) பார்வைக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.

“இந்த டெண்டர் நடவடிக்கைகள் அனைத்தும் மிகவும் வெளிப்படையான முறையில் கையாளப்பட்டு வருகின்றன” என்று அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதியளித்தார்.