நடனப் பயிற்சியின் போது திடீரென இடிந்து விழுந்த கட்டிடம் : 3 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!!

50

கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் நடனப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, கட்டிடத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் 3 மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் (06.05.2026) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த இசை மற்றும் நடனக் கல்லூரியில் உள்ள மேல் மாடிக் கட்டிடம், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், கட்டிடம் உறுதியற்ற நிலையில் இருந்தபோதிலும், மாணவர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் இறுதியாண்டு மாணவிகள் நடனப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது,

திடீரென மாடிக் கட்டிடத்தின் மேல் தரையின் ஒரு பகுதி இடிந்து அவர்கள் மீது விழுந்துள்ளது. இதனால் 3 மாணவிகள் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, கட்டிடத்தின் நிர்மாணத் தரம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரி ஒருவர் பதவி விலகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.