வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் நினைவேந்தலும்!!

10

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் மிகவும் உணர்வுப்பூர்வமான முறையில் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா திருநாவற்குளம் 03ஆம் ஒழுங்கையில் இடம்பெற்ற இந்நிகழ்வினை போராளிகள் நலன்புரி சங்கம் மற்றும் தமிழ் தேசிய ஏற்பாட்டாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து இந்த அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது. நிகழ்வின் ஆரம்பத்தில் போரில் மடிந்த உறவுகளுக்காகவும் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்காகவும் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

போர்க்காலத்தின் கொடூரமான வலிகளையும் பட்டினியால் மக்கள் துடித்த அந்தத் தியாக வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கில் நிகழ்வின் ஒரு பகுதியாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும் அப்பகுதி பொதுமக்களுக்கும் இந்தக் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.

இந்த உணர்வெழுச்சி மிக்க நிகழ்வில் மதத் தலைவர்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு உயிரிழந்த உறவுகளுக்குத் தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.