அடுத்த 48 மணிநேரத்திற்குள் வலுவிழக்கும் குறைந்த காற்றழுத்தம் : கடும் மழைவீழ்ச்சி தொடர்பில் எச்சரிக்கை!!

3

புதிய இணைப்பு : இலங்கையின் வடகிழக்கில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கையை விட்டு விலகிச்செல்லும்போது படிப்படியாக வலுவிழக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (13) பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, தற்போது நிலவும் சீரற்ற மழையுடனான வானிலை அடுத்த 2 நாட்களுக்குத் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அனுராதபுர மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கு மேல் கனமழை பெய்யக்கூடும். பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

முதலாம் இணைப்பு : நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக, தற்போது நிலவும் மழையுடனான காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று காலை 6:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த விசேட அறிவித்தல் மாலை 3:30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 200 மில்லி மீற்றருக்கும் அதிகமான மிகத் கடுமையான மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லி மீற்றர் அளவிலான பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.

மேல், சபரகமுவ, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களும், திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல் வெளியிட்டுள்ளது.

இடி மின்னலுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.