வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு : அடுத்த 48 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

109

மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை எதிர்பார்த்த வேகத்தில் நகராமல் கடந்த பல மணி நேரங்களாக குறிப்பிட்ட இடத்திலேயே நிலை கொண்டிருப்பதனால்

இலங்கையை விட்டு விலகும் என்று எதிர்பார்க்கப்பட்ட மழையுடனான வானிலை அடுத்த 48 மணி நேரத்திற்கு பின்னரே விலகும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இதனால் இன்றும் இலங்கையின் வடக்கு, மேற்கு, வட மேற்கு, மத்திய, வட மத்திய கிழக்கு மற்றும் மாகாணங்களின் பல பகுதிகளுக்கு மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இன்று கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல் மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக்கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இதனால் இந்த மாவட்டங்களின் சில பகுதிகள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்படக்கூடும்.

நாளைய தினமும்(15.05.2026) வடக்கு, கிழக்கு வடமத்திய மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக கனமானது முதல் மிகக் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக வடக்கு மாகாணம் பரவலாக கனமான மழையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் நாளை கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

எதிர்வரும் 16.05.2026 அன்றும் மேற்கு,வட மேற்கு ,வடக்கு, கிழக்கு வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக மேற்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.