
எல்ல பிரதேசத்தில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஒன்பது வளைவு பாலத்தை பார்வையிட வரும் காதல் ஜோடிகளை அச்சுறுத்தி, குற்ற புலனாய்வு அதிகாரிகள் என அடையாளப்படுத்தி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 6300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன், கொள்ளையடிக்கப்பட்ட பல லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் கொள்ளையிட்ட சுமார் 482,000 ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களை பதுளை நகரிலுள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைத்துள்ளனர்.
மேலும், கொள்ளையடிக்கப்பட்ட இரண்டு கைத்தொலைபேசிகளை ரிதிமாலியத்த மற்றும் பெத்தியாகொட ஆகிய பகுதிகளில் உள்ள இருவருக்கு விற்பனை செய்துள்ளனர்.
திருட்டுப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹாலி எல, அந்தலாவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இந்த கொள்ளைச் சம்பவங்களின் முக்கிய நபராகும்.
அவருக்கு எதிராக கதிர்காமம் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் 60 லட்சம் ரூபாய் கொள்ளையிட்டமை, ஹாலி எல மற்றும் பதுளை பகுதிகளில் வீடுகளை உடைத்து திருடியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
2025ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் ஒன்பது வளைவு பாலத்தைப் பார்க்க வந்த காதல் ஜோடியை அச்சுறுத்தி, 18 வயதுடைய யுவதியை பலவந்தமாக காடுகளுக்குள் இழுத்துச் சென்று பாலியல் சீண்டல் செய்த சம்பவத்துடனும் அவருக்கு தொடர்பிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எல்ல நகரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஒருவரை சோதனையிட்டபோது, அவரிடமிருந்து 4125 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் அடகு பற்றுச்சீட்டுக்கள் மீட்கப்பட்டன.
அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து, மற்றைய சந்தேகநபரான 26 வயதுடைய இளைஞர் தெமோதர பகுதியில் வைத்து 2175 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.
சந்தேநபர்கள் போதைப்பொருள் மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




