வவுனியாவை வந்தடைந்தது முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி : உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திய மக்கள்!!

181

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, தமிழினப் படுகொலையில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூரும் ஊர்தி பவனி இன்று(14.05.2026) மதியம் வவுனியா நகரை வந்தடைந்தது.

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக இந்த ஊர்தி பவனி எழுச்சியுடன் ஆரம்பமானது. அங்கிருந்து ஏ-9 வீதி வழியாகப் பயணித்த ஊர்தி, ஓமந்தை பகுதியை வந்தடைந்து, இன்று மதியம் வவுனியா நகருக்குள் பிரவேசித்தது.

வவுனியா நகரிற்கு வந்தடைந்த ஊர்திக்கு, நீண்டகாலமாகப் போராடி வரும் “தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்” தமது கண்ணீர் மல்கிய அஞ்சலிகளைச் செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, வவுனியா மாநகர சபை வாயிலில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பொங்குதமிழ் தூபிக்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் சுடரேற்றி, மலர் தூவி உயிரிழந்தவர்களுக்குத் தமது வணக்கத்தைத் தெரிவித்தனர்.

வவுனியா நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்தி சென்றபோது, வர்த்தகர்களும் பொதுமக்களும் வீதியோரங்களில் திரண்டு நின்று உணர்வெழுச்சியுடன் ஊர்திக்கு அஞ்சலிகளையும் செலுத்தினர்.