
புதிய இணைப்பு : இன்று அதிகாலை இடம்பெற்ற தொடருந்து தடம் புரண்ட விபத்திற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி, தொடருந்து பாதையில் பொருத்தப்பட்டிருந்த இயக்க மற்றும் பூட்டு தண்டு இணைப்பிகளை இரும்பு திருடர்கள் திருடிச் சென்றதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முதலாம் இணைப்பு : பொல்கஹாவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து ஒன்று தடம் புரண்டு, அதன் ஒரு பெட்டி தண்டவாளத்தில் கவிழ்ந்ததில் 12 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை இந்த விபத்து வனவாஸல மற்றும் ஹுனுபிட்டிய தொடருந்து நிலையங்களுக்கு இடையே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 3.25 மணிக்கு பொல்கஹாவெலவிலிருந்து புறப்பட்ட இந்த தொடருந்து, விபத்து நடக்கும் போது களுத்துறை தெற்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்ததாக தெரிவிப்படுகின்றது.
காயமடைந்த பயணிகள் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் F.U.வூட்லர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பலத்த காயமடைந்த ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.




