இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை : வத்தளை உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

189

இலங்கையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக அதிகரித்திருந்த ஆறுகளின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில், மழை வீழ்ச்சி குறைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

இருப்பினும், களு கங்கையின் மில்லகந்த நிலையத்தின் தரவுகளுக்கு அமைவாக, இதுவரையில் சிறு வெள்ள நிலைமை நிலவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அத்தனகலு ஓயா பகுதியில் இதுவரையிலும் சிறு வெள்ள நிலைமை காணப்படுவதால், அத்தனகலு ஓயாவின் கீழ்நிலப் பகுதிகளான கம்பஹா, கட்டான, வத்தளை போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

களனி கங்கையை ஒட்டிய ஹங்வெல்ல பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதாகவும், அதற்கமைய இன்றைய தினமும் மழை பெய்யக்கூடிய வானிலை காணப்படுவதால் ஆறுகளின் நீர்மட்டம் குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று (15) மாலை நிலவரப்படி 73 பிரதான நீர்த்தேக்கங்களில் சுமார் 22 நீர்த்தேக்கங்களும், 19 நடுத்தர அளவிலான குளங்களும் வான்பாய்ந்துள்ளது.

எனவே எதிர்வரும் மழைவீழ்ச்சி நிலவரங்களைக் கருத்திற்கொண்டு வான் கதவுகள் திறக்கப்படுவது குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.