வெளிநாடு செல்வதற்காக தாயை கொலை செய்த மகள்!!

11

அநுராதபுரம் மாவட்டத்தில் திருப்பனை பிரதேசத்தில் தாயை கொடூரமாக கொலை செய்த மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பனை நகர எல்லையில் உள்ள அதுங்கம சந்திக்கு அருகில் வசித்து வந்த 65 வயதுடைய தாயைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 32 வயதுடைய இளைய மகளும், அவரின் காதலன் எனக்கூறப்படும் 25 வயதுடைய இளைஞனும் நேற்று முன்தினம் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது சந்தேக நபர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண் தொழிலின் மூலம் சம்பளமாக பணம் மற்றும் தங்க நகைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் பத்மலதா என்ற இரு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த தாயின் இளைய மகளும், அவரது காதலனும் திருப்பனை அதுங்கம வீதியிலுள்ள வீடொன்றில் குறுகிய காலம் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இவர்களுக்குள் ஏற்பட்ட பணத்தகராறு காரணமாகவே இந்தக்கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்த தாய் சுமார் 24 வருடங்களாக வெளிநாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்துள்ளார். அவர் வெளிநாட்டில் பணிபுரிந்த காலத்தில், தனது இளைய மகளுக்கு திருமணமாகிய பின்னர் அவரையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அதற்கமைய, மகளும் சுமார் 14 வருடங்கள் வெளிநாட்டில் வசித்துள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர். இவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில், மகளின் திருமண வாழ்க்கை தோல்வியடைந்தது.

தோழி ஒருவரின் ஊடாக குருநாகல், இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த இராணுவத்தில் இருந்து தப்பியோடிய சிப்பாய் ஒருவரான சந்தேகநபருடன் பழகத் தொடங்கியுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் மகள் நாட்டிற்கு வந்து தனது சித்தியின் வீட்டில் தங்கியிருந்த போது, மகளையும் அவரது காதலனையும் திருப்பனை வீட்டிற்கு வந்து வாழுமாறு உயிரிழந்த தாய் அழைப்பு விடுத்துள்ளார்.

அதற்கமைய, கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதியளவில் அவர்கள் இருவரும் அந்த வீட்டிற்கு வந்து ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இக்காலப்பகுதியில் வீட்டைச் சுற்றி மதில் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதில் உதவியாளராகவும் இந்த சந்தேகநபர் வேலை செய்துள்ளார்.

இவ்வாறு ஒரே வீட்டில் வசித்து வந்த போதிலும், மூவருக்கும் இடையில் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 11 ஆம் திகதி, மகளின் காதலனை வீட்டை விட்டு வெளியேறுமாறு தாய் கூறியுள்ளார். அவரும் தனது சொந்த ஊரான இப்பாகமுவவிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு, சித்தியின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அதற்கு அடுத்த நாள், சந்தேகநபரான மகளும் வெளிநாடு செல்வதற்கான கடவுச்சீட்டைத் தயாரிப்பதற்காக சித்தியின் வீட்டிற்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அதன்பின்னர், 12 ஆம் திகதி இரவு 7 மணியளவில் வாடகை முச்சக்கரவண்டி ஒன்றின் மூலம் திருப்பனை வீட்டிற்கு மகள் வந்துள்ளார்.

காதலனும் திருப்பனையிலுள்ள உணவகம் ஒன்றில் மதுவருந்திவிட்டு அன்றைய தினமே வீட்டிற்குள் நுழைந்து இந்தக் கொலையைச் செய்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலையின் பின்னர் இருவரும் பேருந்து மூலம் தம்புள்ளை பகுதிக்குச் சென்று அங்குள்ள விடுதியொன்றில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மறுநாள், தாய்க்கு தொலைபேசி அழைப்பு எடுத்தும் பதில் கிடைக்காததால் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, தாய் நோய்வாய்ப்பட்ட நிலையில் படுக்கையில் உயிரிழந்து கிடப்பதாக மகள் திருப்பனைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

திருப்பனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயதிலகவின் அறிவுறுத்தலின் பேரில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது,

குடும்ப உறவினர்கள் வழங்கிய சாட்சியங்கள் முரண்பாடாக இருந்ததால் சந்தேகம் ஏற்பட்டு, சடலம் அனுராதபுரம் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரேத பரிசோதனையின் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக உடற்பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. அனுராதபுரம் நீதவான் நீதிமன்ற நீதவானும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பரிசோதனை மேற்கொண்டார்.

அத்துடன் அப்பகுதியின் சிசிடிவி காட்சிகளைப் பரிசோதித்து பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டனர்.

கடந்த 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உயிரிழந்த பெண்ணின் இறுதிக்கிரியைகள் திருப்பனை பொது மயானத்தில் நடைபெற்றன. சடலம் வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட உடனேயே மகள், அவரது காதலன் மற்றும் சித்தி ஆகியோர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில், உயிரிழந்த தாயிடம் இருந்த 10 லட்சம் ரூபா பணம் மற்றும் தங்க நகைகளை கொலைக்கு முன்னர் திருடியுள்ளதாகவும்,

இவ்வாறு பணம் மற்றும் நகைகளைப் பெற்றுக்கொண்டு வெளிநாடு செல்லும் நோக்கிலேயே இந்தக் கொலையைச் செய்ததாகவும் அந்த மகள் மற்றும் காதலன் ஒப்புக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.