
பணம் பெற்றுக் கொண்டு விமான சேவை வசதிகளை வழங்காத குற்றச்சாட்டின் கீழ் கட்டார் விமான சேவைக்கு எதிராக பொலிஸாரிடம் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து இலண்டன் மற்றும் இலண்டனில் இருந்து கொழும்பு வரைக்கும் பயணங்களை மேற்கொள்வதற்கு பயணிகள் சிலர் கொழும்பில் உள்ள தனாடா ட்ராவல் நிறுவனத்தின் ஊடாக கட்டார் விமான சேவையில் விமானப் பயணச் சீட்டுக்களை கொள்வனவு செய்திருந்தனர்.
மத்திய கிழக்கு யுத்த நிலையைக் காரணம் காட்டி குறித்த விமான வழித்தடத்தில் பயணங்களை இடைநிறுத்திய கட்டார் விமான சேவை நிறுவனம்,
விமானப் பயணிகளின் முன்பதிவுக்கான கட்டணங்களை கடந்த இரண்டு மாதங்களாக திரும்ப வழங்கவில்லை என்று கூறப்படுகின்றது. சுமாராக இரண்டு மில்லியன் ரூபா பணம் அவ்வாறு திரும்ப வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாகவும்,
பல்வேறு தடவைகளில் அதனை ஞாபகமூட்டியபோதும் கட்டார் விமான சேவை நிறுவனம் தட்டிக் கழித்து வருவதாகவும் குறித்த ட்ராவல் நிறுவனம் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளது.
அதன் பிரகாரம் கொழும்பு கோட்டை பொலிஸார், கட்டார் விமான சேவைக்கு எதிரான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.




