மீண்டுமொரு பொருளாதார நெருக்கடி ஏற்பட இடமளிக்கமாட்டேன் : ஜனாதிபதி உறுதி!!

16

2022ஆம் ஆண்டைப் போன்ற ஒரு பொருளாதார நெருக்கடி நாட்டில் மீண்டும் ஏற்பட ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.

நேற்று காலை (22.05.2026) நிந்தவூர் கலாசார மையத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 2022ஆம் ஆண்டைப் போன்ற ஒரு பொருளாதார நெருக்கடி நாட்டில் மீண்டும் ஏற்படும் என்று சிலர் கருத்து தெரிவித்திருந்தாலும் அத்தகைய ஒரு நிலைமை நாட்டில் ஒருபோதும் ஏற்படாது.

மத்திய கிழக்கில் போர் மூண்டாலும், அது ஒரு வெளிப்புற நெருக்கடியாக இருந்தாலும், அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்கும் வலிமை அரசாங்கத்திற்கு உள்ளது.

வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது, இனவாதத்தை அனுமதிக்காமல் இருப்பது, ஊழல்வாதிகளைத் தண்டிப்பது, சட்டம் அனைவருக்கும் சமமாகப் பொருந்தும் ஒரு நாட்டை உருவாக்குவது மற்றும் அரசியல்வாதிகளின் வரம்பற்ற சலுகைகளைக் கட்டுப்படுத்துவது ஆகியவையே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது அதற்கு வழங்கப்பட்ட ஆணையாகும்.

அரசியல்வாதிகளின் வரம்பற்ற சலுகை
இது தொடர்பாக அரசாங்கம் ஏற்கனவே கணிசமான அளவு பணிகளைச் செய்து முடித்துள்ளது.

அனைவருக்கும் சட்டம் சமமாகப் பயன்படுத்தப்படும் ஒரு நாட்டை உருவாக்கும் பொறுப்பு எனது அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்படாவிட்டால், அது வேறு எந்த அரசாங்கத்தின் கீழும் நிறைவேற்றப்படாது.

இன்று அதிகாரம், செல்வம் மற்றும் அந்தஸ்து ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் சட்டம் பயன்படுத்தப்படுகிறது.

அதேபோல், ஓய்வூதியங்கள் உட்பட அரசியல்வாதிகளின் வரம்பற்ற சலுகைகளை ஒழித்து, அரசியல்வாதிகளை மக்களுக்காக உழைக்கும் நபர்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.