இரவு உணவுக்கு வீட்டுக்கு வருவதாக உறுதியளித்தவர்: வெளிநாட்டில் இந்தியருக்கு ஏற்பட்ட கொடூரம்!!

9

நியூசிலாந்தின் பாபாமோவாவில், உபேர் வாகனத்தில் இரவு நேரப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வம்சாவளி நபர் ஒருவர், இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், பெல் ரோடு மற்றும் பாப்லர் லேன் இடையே உள்ள தே புகே பிரதான சாலையில் நடந்த விபத்தில் 36 வயதான ரமந்தீப் தில்லன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

அதேவேளை மற்றொரு வாகனத்தில் இருந்த இருவர் காயங்களுடன் தப்பியுள்ளனர். இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த தில்லன், 2015-ஆம் ஆண்டில் மாணவர் விசா மூலம் நியூசிலாந்திற்குச் சென்றுள்ளார்.

கடந்த 2024ல் இந்தியா திரும்பிய தில்லன் பின்னர் வீரபால் கவுரைத் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக நியூசிலாந்துக்குக் குடிபெயர்ந்து பாபாமோவாவில் குடியேறினர், அங்கு இருவரும் கிவிப்பழத் தோட்டங்களில் பணியாற்றினர்.

ஆனால் அந்த தம்பதிக்கு மகள் ஒன்று பிறந்ததும், அவரைக் கவனித்துக்கொள்வதற்குச் சற்று நெகிழ்வுத்தன்மை கிடைப்பதற்காக, தில்லன் உபேர் வாகனம் ஓட்டத் தொடங்கினார்.

புதன்கிழமை மதியத்திற்கு மேல் 7.15 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளதாகவே கூறப்படுகிறது. தில்லன் பொதுவாக தனது 18 மாத மகளுடன் நேரம் செலவிட்டதன் பின்னரே வேலைக்கு கிளம்புவாராம்.

அன்று மாலை வேலைக்குக் கிளம்புவதற்கு முன், இரவு உணவிற்காகத் தான் திரும்பி வருவதாக தில்லன் தனது மனைவியிடம் உறுதி அளித்துள்ளார்.

ஆனால், நேரம் கடந்தும் அவர் வீடு திரும்பாத நிலையில், அலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார் அவரது மனைவி. தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியாமல் போகவே, பரிதவிப்பில் இருந்த அவருக்கு இடியாக இறங்கிய அந்த தகவல் வந்துள்ளது.

சாலை விபத்தில் தில்லன் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். தில்லானின் இறுதிச்சடங்கு புதன்கிழமையன்று நடைபெற்றது; இதில் நியூசிலாந்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் பெருந்திரளாக கூடி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.