700 ரூபாய் வரை அதிகரிக்க திட்டமிடப்பட்ட எரிபொருள் விலை? பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

10

புதிய இணைப்பு : எதிர்வரும் ஜூலை மாதம் இறுதி வரை நாட்டிற்குத் தேவையான எரிபொருள் இருப்புக்கள் தற்போது நாட்டில் உள்ளதாகப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPSTL) முகாமைத்துவப்பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இந்த மாதம் 28 மற்றும் 31 ஆம் திகதிகளில் மேலும் இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் நாட்டிற்கு வரவுள்ளதாகவும்,

எதிர்வரும் நாட்களில் எரிபொருள் விலையில் பெரியளவிலான உயர்வையோ அல்லது விலை குறைப்பையோ எதிர்பார்க்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

ஏப்ரல் மாதத்தில் உலக சந்தையில் டீசல் விலை அதிகரித்திருந்த போதிலும், தற்போது அந்த விலை படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் விளக்கமளித்துள்ளார்.

இதற்கு முன்னதாக எதிர்பார்க்கப்பட்டவை போன்று விலையை 700 ரூபாய் வரை அதிகரிக்க வேண்டிய தேவை தற்போது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்

முதலாம் இணைப்பு : நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்றும், தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக எரிபொருள் விலை உயர்வு குறித்து பொய் வதந்திகள் பரவி வருவதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர் மயூர நெத்திகுமாரகே விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, அடுத்த சில நாட்களுக்குள் இரண்டு மசகு எண்ணெய் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து தலா 90,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெயை அந்த கப்பல்கள் ஏற்றி வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எரிபொருள் விலை உயர்வு குறித்து பரவும் வதந்திகளால் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே தற்போது தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.