வெளிநாடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை இளைஞன் : சகோதரியின் கோரிக்கை நிராகரிப்பு!!

105

ஜப்பானின் Ibaraki மாகாணத்தில் உள்ள Tsuchiura நகர பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, இலங்கை மாணவன் உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே 19ஆம் திகதி உயிரிழந்த இலங்கை மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் அவரது தங்கை செய்த முறைப்பாட்டினை ஜப்பனிய பொலிஸார் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது ஜப்பானில் வசித்து வரும் உயிரிழந்த மாணவனின் தங்கையான சத்யானி ஷாக்யா என்பவரே இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

உயிரிழந்த மாணவனின் சடலம்

உயிரிழந்த மாணவனின் சடலம் இதுவரை இலங்கைக்கும் அனுப்பப்படாமல், ஜப்பானில் உள்ள ஒரு பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை, பெலியத்த மஹாஹீல்ல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய விசக்ஷன, 2023ஆம் ஆண்டு தொழில்துறை கல்விநெறி ஒன்றிற்காக ஜப்பான் சென்றுள்ளார்.

உயிரிழக்கும் போது அவர் Toride நகரில் வசித்து வந்ததாக ஜப்பனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெப்ரவரி 22ஆம் திகதி, விசக்ஷன தனது நண்பர்கள் சிலருடன் Tsuchiura நகருக்கு பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார்.

அங்குள்ள ஒரு கடையில், அவரும் மற்றொரு யுவதியும் பொருட்களைத் திருடியதாகக் கூறி கடை உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் அடிப்படையில் அவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸாரின் அலட்சியம்

இது குறித்து ஜப்பானில் உள்ள அவரது தங்கைக்கு பொலிஸார் தகவல் வழங்கியதை அடுத்து, அவர் தூதரகத்தின் மூலம் வழக்கறிஞர் ஒருவரை ஏற்பாடு செய்து சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகியுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதிலும், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

ஜப்பனிய பொலிஸ் தடுப்புக்காவலில் பல வாரங்களாக வைக்கப்பட்டிருந்ததால் அந்த இளைஞரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.

தனக்கு தலைவலியும் நெஞ்சுவலியும் இருப்பதாக பொலிஸாரிடம் கூறிய போதும், அதனைப் பொருட்படுத்தவில்லை என்று உயிரிழந்த இளைஞர் தனது தங்கையிடம் பலமுறை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பெப்ரவரி 22 முதல் மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து விசக்ஷன பொலிஸ் நிலையத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த மே 19ஆம் திகதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அவரது தங்கை சத்யானி ஷாக்யாவுக்கு ஜப்பனிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.

தனது சகோதரனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தங்கை செய்த முறைப்பாட்டினையும் தற்போது ஜப்பானிய பொலிஸார் நிராகரித்துள்ளனர்.