வவுனியா ஓமந்தையில் மாட்டுடன் மோதுண்டு முச்சக்கரவண்டி விபத்து : ஒருவர் படுகாயம், டிப்பர் சாரதி கைது!!

209

வவுனியா ஓமந்தைப் பகுதியில் மாட்டுடன் மோதுண்டு கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, ஏ9 வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி, வீதியில் திடீரென குறுக்கே வந்த மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது. அவ்வேளையில், கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி, எதிரே வந்த டிப்பர் வாகனத்துடனும் மோதியுள்ளது.

இந்த இரட்டை விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்ததுடன், அதன் சாரதி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டி டிப்பர் வாகனத்துடன் மோதியதன் அடிப்படையில், டிப்பர் வாகனத்தின் சாரதி ஓமந்தைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சாரதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.