
வவுனியா, கற்குளம் சாஸ்திரிகுளங்குளம் பகுதியில் விடுதலைப் புலிகளின் காலத்தில் புதைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் நகைகளைத் தேடி இன்று (29.05.2026) முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணி எவ்விதப் பொருட்களும் மீட்கப்படாத நிலையில் நிறைவடைந்துள்ளது.
பொதுமகன் ஒருவரின் வீட்டு வளாகத்தில் இந்தத் தேடுதல் வேட்டை மற்றும் அகழ்வுப் பணிகள் அதிஉயர் பாதுகாப்புக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் நேரடி ஆலோசனைக்கு இணங்கவும், அவரது பிரசன்னத்துடனும் இந்த விசேட நடவடிக்கை திட்டமிடப்பட்டிருந்தது.
வவுனியா மாவட்ட பதில் நீதிமன்ற நீதவான் தி.திருஅருளின் நேரடி கண்காணிப்பில், பொலிஸாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இந்த அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த வீட்டின் வளாகத்தில், சந்தேகத்திற்குரியதாகக் கருதப்பட்ட நான்கு வெவ்வேறு இடங்களில் எக்ஸ்கவேட்டர் (Excavator) இயந்திரங்கள் மூலம் ஆழமாக அகழ்ந்து சோதனையிடப்பட்டது.
எனினும், பல மணிநேரம் நீடித்த இந்தத் தீவிர தேடுதல் நடவடிக்கையின் முடிவில், சந்தேகிக்கப்பட்டவாறு ஆயுதங்களோ அல்லது தங்க நகைகளோ என எந்தவொரு பொருளும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்விதப் பொருட்களும் கண்டெடுக்கப்படாததைத் தொடர்ந்து அகழ்வுப் பணிகள் தற்காலிகமாகக் கைவிடப்பட்டு, பாதுகாப்புத் தரப்பினர் அவ்விடத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.





